சென்னை: விமானப் பயணச் சீட்டு இல்லாமல், ஏழு அடுக்குப் பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் நுழைந்த ஆடவர் ஒருவரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுதந்திர தினத்தையொட்டி, சென்னை விமான நிலையத்தில் உச்சகட்டமாக ஏழு அடுக்குப் பாதுகாப்பு முறை அமலில் உள்ளது.
ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு இளைஞர் ஒருவர் விமானப் பயணச் சீட்டு, சிறப்பு அனுமதிச் சீட்டு எதுவும் இல்லாமல், விமான நிலையத்தின் பாதுகாப்புச் சோதனை, சுங்கச் சோதனை ஆகிய பகுதிகளைக் கடந்து, குடியுரிமைச் சோதனை நடக்கும் பகுதிவரை சென்று அங்கு சுற்றிக் கொண்டிருந்தார்.
இரவு 10 மணி அளவில் குடி யுரிமை அலுவலக முகப்புப் பகுதியில் ஊழியர் ஒருவரின் கைத்தொலைபேசியைத் திருட முயன்றுள்ளார்.
இதையடுத்து, அந்த இளைஞரைப் பிடித்து அடித்த அதி காரிகள், விமான நிலைய காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தினேஷ் ஞானசூரியன் (35) என்பதும், மூன்று மாத விசாவில் இலங்கையிலிருந்து சென்னை வந்திருப்பதும் தெரியவந்தது.