ஈரோடு: புதையல் எடுத்துத் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி 35 லட்சம் ரூபாய் மோசடி செய்த கதிரவன் என்ற ஆடவருக்கு ஈரோடு காவல்துறையினர் வலைவீசி உள்ளனர்.
இந்நிலையில், பணம் கொடுத்து ஏமாந்த ஐந்து பேர் கதிரவனின் நண்பரைக் கடத்தியதை அடுத்து காவல்துறையிடம் சிக்கினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கதிரவன்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்த சிவக்குமார் உட்பட ஐந்து பேருக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் கதிரவன் அறிமுகமானார்.
பின்னர் அவர்களிடம் நெருங்கிப் பழகிய கதிரவன், ரூ.35 லட்சம் கொடுத்தால் புதையலை எடுத்துத் தர இயலும் என்றும் தமக்கு அதில் எந்தவிதமான பங்கும் தேவையில்லை என்றும் கூறினார்.
இதை நம்பிய சிவக்குமார் உட்பட ஐவரும் அவர் கேட்ட பணத்தை கொடுத்தனர். ஆனால் தாம் உறுதியளித்தபடி புதையல் எதையும் கதிரவன் எடுத்துத் தரவில்லை. பல்வேறு சாக்குபோக்குகளைச் சொல்லி காலம் கடத்திய அவர், ஒரு கட்டத்தில் ஐந்து பேரிடம் பேசுவதை நிறுத்தினார்.
பின்னர் அவரை அறவே தொடர்புகொள்ள முடியவில்லை.
இதனால் கோபமடைந்த சிவக்குமார் உள்ளிட்ட மற்ற அனைவரும் இரு தினங்களுக்கு முன்னர் திருப்பூரில் உள்ள கதிரவனின் நண்பரான பாலாஜி என்பவரைச் சந்திக்கச் சென்றனர்.
அப்போது ரூ.35 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது ஐந்து பேருமாகச் சேர்ந்து பாலாஜியைக் கடத்திச் சென்றனர்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறை துரித கதியில் செயல்பட்டு வாகனச் சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதில் ஐந்து பேரும் சிக்கினர். இரு கார்களில் சென்ற அவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், பாலாஜியை மீட்டனர். சிவக்குமார் உள்ளிட்ட ஐவரும் கைதான நிலையில், கதிரவனுக்கு வலைவீசப்பட்டுள்ளது.