சென்னை: தமிழகத்தை உற்பத்தித் துறையில் முன்னணி மாநிலமாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொருளியல் ஆலோசனைக் குழு கூட்டத்தில் காணொளி வசதி மூலம் உரையாற்றிய அவர், பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் ரூ.2.97 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஒவ்வொரு திட்டத்தையும் வடிவமைப்பதில் இருந்து அதனைச் செயல்படுத்தும் வரை தமிழக அரசு பல்வேறு துறை வல்லுநர்களிடம் கருத்துகளைக் கேட்டறிவதாக முதல்வர் தெரிவித்தார்.
தலைசிறந்த பொருளியல் வல்லுநர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்து செயல்படுவதாகவும் உற்பத்தித் துறையை மேம்படுத்தி, இளையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை அரசு இலக்காகக் கொண்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
“கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு துறைகளுக்கான தனித்தனிக் கொள்கைகளை வகுத்து அறிவித்துள்ளோம். பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளைத் தரக்கூடிய தோல் அல்லாத காலணி உற்பத்தியிலும் எதிர்கால வளர்ச்சித் துறையான மின்வாகன உற்பத்தியிலும் நாட்டிலேயே அதிக முதலீடுகளைப் பெற்றுள்ளோம்.
“மொத்தமாக, உற்பத்தித் துறையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம், ரூ.2.97 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம். 2020-21-ஆம் ஆண்டில் மின்னணுவியல் பொருள்கள் உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாட்டைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் இடத்திற்கு உயர்த்தியுள்ளோம்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இத்தகைய பல்வேறு முயற்சிகளால், ஏற்றுமதி வளர்ச்சிக்கான தயார்நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு இந்திய அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது என்றும் கல்வியிலும் மருத்துவத்திலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.