சென்னை: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கும் அதிகாரம் கர்நாடக அரசிடமிருந்து பறிக்கப்பட்டு, தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பிடம் வழங்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
“காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மாதிரியாக நடுவர் மன்றத்தால் கூறப்பட்டுள்ள பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் அனைத்து அதிகாரங்களையும் கொண்டதாக உள்ளது,” என்றும் ராமதாஸ் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “இந்த வாரியம்தான் பக்ரா, நங்கல், பியாஸ் திட்டங்களின் அணைகளை இயக்கி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், சண்டிகர், டெல்லி ஆகிய 7 மாநிலங்களுக்கு நீரையும் மின்சாரத்தையும் வழங்கி வருகிறது. 55 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இந்த அமைப்பு எந்தச் சிக்கலும் இல்லாமல் நீரையும் மின்சாரத்தையும் பகிர்ந்தளித்து வருகிறது.
“காவிரி நடுவர் மன்றம் 1991ஆம் ஆண்டு வழங்கிய இடைக்காலத் தீர்ப்பும் 2005ஆம் ஆண்டு வழங்கிய இறுதித் தீர்ப்பும் கர்நாடக அரசால் ஓர் ஆண்டுகூட சரியாகச் செயல்படுத்தப்படவில்லை. அதனால் இப்போதைய அமைப்பு மாற்றப்பட வேண்டும்.
“பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்துக்கு வழங்கப்பட்டிருப்பது போன்று, காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் இயக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.
“இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்,” என்று கூறியுள்ளார்.