சென்னை: திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். அக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவற்றில், தமிழ் நாட்டை மேம்படுத்தக்கூடிய எந்தவொரு திட்டத்திற்கும் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை. உதாரணத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூறலாம். அதேபோல் இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்வதையும் கிடப்பில் போட்டுள்ளது மத்திய அரசு. தமிழ்நாட்டு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு மத்திய அரசு தடைக்கல்லாக இருப்பதைக் கண்டிக்கும் வகையில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தில் குரல் எழுப்ப திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் நடுவர் மன்றமும் உச்ச நீதிமன்றமும் அளித்த தீர்ப்புகளை கர்நாடக மாநிலம் பொருட்படுத்தவில்லை. எனவே, இதில் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.
நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதலை அளித்திட தொடர்ந்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன்,நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 விழுக்காடு மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்ப திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசால் அறிவிக்கப்பட்ட “விஸ்வகர்மா யோஜனா” திட்டம், குலத்தொழிலை ஊக்குவிக்கும் வகையிலான நடைமுறைகளை வகுத்து, அதிலும் குறிப்பாக 18 வயது நிறைந்துள்ளவர்களைக் கல்லூரிக்குச் செல்லவிடாமல், பரம்பரைத் தொழிலையே செய்யத் தூண்டும் குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி என்றும் அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு தமிழகத்திற்கு எதிரான பாஜகவின் போக்குகள், திட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தில் ‘ஒரே நாடு-ஒரே தேர்தல்’ சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின், அந்தக் கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றச் சிறப்பு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.