விராலிமலை: விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டி-தென்னலூர் சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகின்றது. அந்தக் கடையில் தினமும் பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை தினம் என்பதால் கூடுதலாக மது விற்பனை நடைபெற்றது.
வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 10.30 மணியளவில் வியாபாரமான தொகையான ரூ.4,83,390 பணத்தை கடைக்கு உள்ளே இருக்கும் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துவிட்டு ஊழியர்கள் சென்று விட்டனர்.
திங்கட்கிழமை காலை அப்பகுதி வழியாகச் சென்ற சிலர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு காவல்துறையிடம் தெரிவித்தனர். விரைந்து சென்ற இலுப்பூர் காவல்துறையினர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே பாதுகாடப்புப் பெட்டகம் உடைக்கப்பட்டு இருந்தது.
அதில் வைத்திருந்த ரூ. 4,83,390 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.