கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடற்கரை சாலை மற்றும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.
நடைபாதைகளில் கடைகள் இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது என்று ஏராளமான புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் புதன்கிழமை கன்னியாகுமரியில் “திடீர்” என்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கன்னியாகுமரி கடற்கரை சாலை மற்றும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் நடைபாதைகளுக்கு இடையூறாக இருந்த கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
இதையடுத்து நேற்று காலையில் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் அறிவுரையின்பேரில் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஷ் ஆகியோர் முன்னிலையில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த 200க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.
இதேபோல கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் தேவசம் நிர்வாகத்துக்குச் சொந்தமான முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் ஆக்கிரமித்து வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளும் அகற்றப்பட்டன.
குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், குமரி மாவட்ட திருக்கோவில் களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், முன்னாள் கண்காணிப்பாளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.