நீலகிரி: மாலைப்பாதையில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் மாண்டுவிட்டனர். பலர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை மாலை குன்னூர் மலைப்பாதையில் உள்ள மரப்பாலம் என்ற பகுதியில் அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது கொண்டை ஊசி வளைவில் பேருந்தை திருப்ப முயன்றார் ஓட்டுநர். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அப்பேருந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் ஓரிரு நொடிகளில் சாலையோர தடுப்பை உடைத்துக்கொண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.
“அந்தப் பள்ளம் ஏறக்குறைய 150 அடி ஆழம் கொண்டது. நல்ல வேளையாக முப்பது அடியில் இருந்த மரம் ஒன்று பேருந்து மேற்கொண்டு பள்ளத்தில் உருண்டு செல்வதை தடுத்து நிறுத்தியது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளது,” என்று மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு 61 பேர் பேருந்தில் சுற்றுலா மேற்கொண்டனர்.
பல்வேறு இடங்களைச் சுற்றிப்பார்த்து ரசித்த பின்னர் சனிக்கிழமை சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். பயணக் களைப்பால் அனைவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த வேளையில், பேருந்து விபத்துக்குள்ளானது.
பள்ளத்தில் விழுந்த பேருந்தில் இருந்து பயணிகள் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பியதாகவும் அதைக் கேட்டு அவ்வழியே சென்ற வாகனமோட்டிகள் காவல்துறைக்கும் தீயணைப்புத்துறைக்கும் விவரம் தெரிவித்ததாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கயிறுகள் கட்டி, அதன் மூலம் பள்ளத்தில் இருந்து ஒவ்வொரு பயணியாக மீட்டனர்.
இந்த விபத்தில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 53 பேரில் நான்கு பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், நீலகிரி எம்பி ஆ.ராசா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் விபத்தில் காயமடைந்து குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகைக்குரிய காசோலையை அளித்தனர்.
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.