சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்களுடைய கோரிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும் வேறு வழியின்றி போராட்டத்தை தொடர்வதாகவும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என இந்து தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டம் நீடித்தது.
சென்னையில் போராட்டம் நடைபெறும் இடத்தில் பந்தல்களை அமைத்து, இரவு பகலாக குழந்தைகளுடன் தங்கியுள்ளனர் ஆசிரியர்கள்.
இதைச் சுட்டிக்காட்டி உள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள், இதுவரை இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்த நிலையில், அரசாங்கம் அவர்களுடைய கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
22 ஆசிரியர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் நடைபெறும் இடத்திலேயே அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர்கள் அகிம்சை தீபம் ஏற்றினர். ஐந்தாம் தேதிக்குள் அரசு நியாயமான முடிவை எடுக்காவிட்டால் உண்ணாவிரதம் நீடிக்கும் என ஆசிரியர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.