தஞ்சாவூர்: காவிரி விவகாரம் தொடர்பில் தமிழ்நாட்டில் புதன்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 40,000 கடைகள் மூடப்பட்டன.
கர்நாடக அரசு உடனடியாக காவிரியில் தண்ணீரைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தியும் கர்நாடகாவில் போராட்டம் நடத்தி வரும் கன்னட அமைப்புகளை, பாஜகவைக் கண்டித்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் புதன்கிழமை காவிரிப் படுகைப் பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடந்தது.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு முழு ஆதரவு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல நகர்களிலும் பல இடங்களிலும் ஆயிரக் கணக்கான விவசாயிகளும் அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு வெளியே கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்பகோணத்தில் அஞ்சலகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்திய 500 பேர் கைதாயினர்.
இதனிடையே, தமிழக சட்டமன்றம் திங்கட்கிழமை தீர்மானம் ஒன்றை ஏகமனதாக நிறைவேற்றியது.
காவிரி நீரை தமிழ் நாட்டுக்குத் திறந்துவிடும்படி காவிரி ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை கர்நாடகா நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் கேட்டுக் கொண்டது.
இதனிடையே, மேட்டுர் அணையில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிடப்படுவது செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டது.
போதிய தண்ணீர் இல்லாததே காரணம். இருந்தாலும் குடிதண்ணீர் தேவையை நிறைவேற்றும் வகையில் 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்று அதகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் 155 குடிதண்ணீர் திட்டங்கள் காவிரி நீரைச் சார்ந்து செயல்படுகின்றன. அதோடு 40க்கும் மேற்பட்ட தொழில்துறைகளுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு அணையில் இருந்து விவசாயத்திற்குத் தன்ணீர் திறப்பு இப்போதைக்கு நிறுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.