சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற போட்டித் தேர்வில் வடஇந்தியர்கள் மோசடியில் ஈடுபட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுங்கத்துறையின் சென்னை அலுவலகத்தில் கடைநிலைப் பணிகளுக்கு 17 பேரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற போட்டித் தேர்வில், அதிநவீன தகவல் தொடர்புக் கருவிகளை பயன்படுத்தி வெளியிலிருந்து விடைகளை கேட்டு எழுதியதாக 29 பேரும், ஆள் மாறாட்டம் செய்ததாக ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“கைது செய்யப்பட்டுள்ள 30 பேரில் 26 பேர் ஹரியானாவையும், தலா இருவர் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற போட்டித் தேர்வில் வடஇந்தியர்கள் மோசடியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது,” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகளுக்கு கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்ற போட்டித் தேர்வுகளில் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அஞ்சல்துறை பணிக்கான தமிழ்மொழி போட்டித் தேர்வில்கூட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறாத நிலையில், அனைத்து இடங்களுக்கும் தமிழே தெரியாத ஹரியானா மாநிலத்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.
இதனால், போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் வட இந்தியர்கள் மோசடியின் மூலமாகவே வெற்றி பெறுகிறார்களா என்ற ஐயம் எழுந்திருப்பதாகவும் அண்மைய மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்த ஐயம் வலுவடைந்திருப்பதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
“அரசுப் பணிகள், குறிப்பாக மத்திய அரசு பணிகள், குதிரைக் கொம்பாக மாறி வரும் நிலையில், அந்த பணிகளில் தகுதியானவர்களும் திறமையானவர்களும் உள்ளூர் மக்களும் அமர்த்தப்படுவதற்கு பதிலாக, பணியிடங்களுடன் சிறிதும் தொடர்பில்லாத சிலர் மோசடியான வழிகளில் அந்த வேலைவாய்ப்புகளை பறித்துக் கொள்வது மிகப்பெரிய குற்றம்,” என்று ராமதாஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகள் பிற மாநிலத்தவர்களால் பறிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இந்த மோசடியின் பின்னால் இருப்பவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தி உள்ளார்.