சென்னை: சென்னை விமான நிலையம் அருகே பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறது.
சென்னை விமான நிலையம் அருகே சென்று கொண்டிருந்த அந்தச் சொகுசு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது.
பின்னர் சாலையோரம் நின்றிருந்த கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. மேலும், அப்பகுதியில் பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் மீதும் அந்தக் கார் மோதியதில் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து, காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், சொகுசு காரை ஓட்டி வந்த ஓட்டுநரைக் கைது செய்தனர்.
அவரது பெயர் ரஞ்சித் என்றும் அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
காரை அதிவேகமாக இயக்கியபோது அது கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும் முதன்முறையாகச் சொகுசு கார் இயக்கியதால் அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தெரியவில்லை என அவர் கூறியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.