ராமேசுவரம்: 106 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து வந்த மண்டபம்-ராமேசுவரம் தீவு பகுதியை இணைக்கும் பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது, சேதம் காரணமாக அந்த பாதையில் ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, கடந்த 2019 ஆண்டு ரூ.525 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்பத்துடன் பாம்பன் ரயில் பாலம் கட்டுமானப் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
தற்போது மண்டபத்தில் இருந்து மையப்பகுதி வரையில் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதேபோன்று பாம்பனில் இருந்து மையப்பகுதி வரை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மேலும் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் மையப்பகுதியில் பொருத்தப்பட உள்ள தூக்கி இறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாலம் 500 டன் எடையை கொண்டுள்ளது.
இந்த பாலம் முழுமையாக பொருத்தப்பட்டு மையப்பகுதிக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெறுகின்றன.
மேலும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது இந்த புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார்.
அதன் எதிரொலியாக அனைத்து பணிகளையும் வேகமாக முடிக்க அதிக அளவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பாம்பன் புதிய ரயில் பாலம்கட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.