சென்னை: திரையரங்கில் அமைச்சர் குடும்பத்தார் மீது தாக்குதல் நடத்திய ஆறு பேரை சென்னை காவல்துறை தேடி வருகிறது.
தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் மகன், பேரன் உள்பட குடும்பத்தினர் சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள திரையரங்குக்கு அண்மையில் வெளியான திரைப்படம் ஒன்றை பார்க்கச் சென்றனர்.
அப்போது அமைச்சரின் குடும்பத்தார் அமர்ந்திருந்த வரிசைக்குப் பின்னால் அமர்ந்திருந்த மூன்று பெண்கள் உள்ளி்ட்ட ஆறு பேர், அவ்வப்போது உற்சாக மிகுதியில் கூச்சல் போட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அமைதியாக இருக்குமாறு அமைச்சரின் மகன் ரமேஷ் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது என்றும் அமைச்சரின் மகனும் பேரனும் தாக்கப்பட்டனர் என்றும் மாலை மலர் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இச்சம்பவத்தை அடுத்து தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பேரும் தப்பியோடிவிட்டனர். அவர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது.
காயம் அடைந்த அமைச்சரின் பேரன் கதிர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதிகாலை நான்கு மணியளவில் அவர் வீடு திரும்பியதாக ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.