ராணிப்பேட்டை: தீபாவளியன்று பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் நான்கு வயதுச் சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை, மாம்பாக்கம் பகுதியில் வசித்து வரும், ரமேஷ் (28), அஸ்வினி (25) தம்பதியர்க்கு நான்கு வயதில் நவிஷ்கா என்ற பெண் குழந்தையும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
தீபாவளியன்று குடும்பத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடியது இச்சிறிய குடும்பம்.
ரமேஷின் அண்ணன் விக்னேஷ் (31 வயது) பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தார். அதைச் சிறுமி நவிஷ்கா வேடிக்கை பார்த்தாள். அப்போது விக்னேஷ் வெடித்த ஒரு பட்டாசு எதிர்பாராதவிதமாக சிறுமியின்மீது விழுந்து, அதன் பிறகு வெடித்துச் சிதறியது.
இதில் சிறுமி நவிஷ்காவின் மார்பு, கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், வழியிலேயே சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குதூகலமாகத் தொடங்கிய கொண்டாட்டம் பெருஞ்சோகத்தில் முடிவடைந்தது.