சென்னை: தீபாவளியன்று சென்னையில் மட்டும் 148 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டன. தீயணைப்புத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது.
எனினும் இந்த விபத்தில் இருவருக்கு மட்டுமே தீக்காயம் ஏற்பட்டது என்றும் பொதுமக்கள் விபத்துகளில் சிக்காமல் பட்டாசுகள் வெடித்து தீபாவளியைக் கொண்டாடியது மனநிறைவு அளிப்பதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவில், கொளத்தூர் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீடு, பெரியமேடு பகுதியில் உள்ள கடை, வண்ணாரப்பேட்டையில் உள்ள கிடங்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்தத் தீ விபத்துகள் ஏற்பட்டன என்றும் இந்த விபத்துகளால் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
விபத்து நிகழ்ந்த இடங்களுக்கு துரிதமாகச் சென்று, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயணைப்பு, மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.