சென்னை: மூதாட்டியைக் கட்டிப் போட்டுக் கொள்ளையடித்த பணிப்பெண்ணும் அவரது கணவரும் கைதாகினர்.
சென்னை கோயம்பேடு பகுதியில் தனியாக வசித்து வருகிறார் 73 வயதான ஆயிஷா சுல்தானா. சேலத்தைச் சேர்ந்த 40 வயதான சாஹின் என்ற பெண் உடனிருந்து இவரைக் கவனித்து வந்தார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மூதாட்டி ஆயிஷாவைக் கட்டிலில் கட்டிப்போட்டு விட்டு வீட்டிலிருந்த 5 பவுன் தங்க நகைகள், ரொக்கப் பணம், இரண்டு கைப்பேசிகளைக் கொள்ளை அடித்து தப்பிச் சென்றார் சாஹின்.
இந்தக் கொள்ளையில் அவரது கணவர் சித்திக்கும் உதவியது காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் கோயம்பேடு பகுதி யில் உள்ள தங்கு விடுதியில் தங்கியிருந்த இவர்கள் இருவரையும் காவல் துறை கைது செய்தது.
கொள்ளையடித்த இரண்டு மணி நேரத்தில் இருவரும் சிக்கினர். சாஹின் ஏற்கெனவே ஆறு இடங்களில் இவ்வாறு பணிப்பெண்ணாக வேலை பார்த்து கொள்ளையடித்துள்ளார் என்பது விசாரணையில் அம்பலமானது.