சென்னை: தமிழகத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி 7,000 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் நிறுவப்பட்டுள்ள சூரிய சக்தி காற்றாலை, சிறிய நீர் மின் நிலையங்கள், தாவரக் கழிவு, சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட மின்உற்பத்தித் திறன் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அண்மை அறிக்கையில் அக்டோபர் மாத நிலவரம் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
அதன்படி, தமிழகத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தித் திறன் தற்போது 7,163 மெகாவாட்டாக உள்ளது என மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட மின்சக்தித் துறை குறிப்பிட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 263 மெகாவாட் உற்பத்தி செய்வதற்கான புது மின்நிலையங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் நாடு தழுவிய அளவில் புதுப்பிக்கப்பட்ட மின்உற்பத்தித் திறனில் குஜராத் முதல் இடத்திலும் தமிழகம் அடுத்த இடத்திலும் உள்ளன என்றும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.