சென்னை: வங்கக்கடலில் உருவாக உள்ள மிச்சாங் புயல் தமிழ்நாட்டை நோக்கி வரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இந்த நிலையில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்று கூறப்பட்ட நிலையில், இது தாமதமாகி வரும் டிசம்பர் 3ஆம் தேதி புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு மிச்சாங் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மிச்சாங் புயல், பங்ளாதேஷை நோக்கி நகருமா அல்லது மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திராவை நோக்கிச் செல்லுமா என்பது உள்ளிட்ட பலகேள்விகள் எழுந்தநிலையில், இந்த மிச்சாங் புயல் வடமேற்குத் திசையில் நகர்ந்து சென்று வரும் டிசம்பர் 4ஆம் தேதி தமிழகத்தின் வடக்குப் பகுதி மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கிச் செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலின் கூர்முனை சென்னையை நோக்கி உள்ளதாக கூறப்படுவது சென்னை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, புயலின் அச்சம் காரணமாக கல்விக் கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதியில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை நிலையம் அறிவித்துள்ளது. இதனால் இந்தப் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் முன் எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராக இருக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
வங்கக்கடலில் புயலுக்கான வலுவான சூழல் நிலவி வருவதால் தமிழகத்தில் வியாழக்கிழமை முதல் 5 நாள்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
புயல் சின்னம் வலுவடைகின்ற நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வியாழக்கிழமை முதல் சூறாவளி காற்று வீசக்கூடும்.
காற்றின் வேகம் 40 கி.மீ. வேகத்தில் இருந்து படிப்படியாக 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.