சென்னை: தமிழ் நாட்டில் புதுவகைத் தொற்று பரவி வருவதாகக் கூறப்படுவது குறித்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
“புதிய வகை தொற்று 3 அல்லது 4 நாள்களில் சரியாகிவிடும் என்பதால் பதற்றமடையத் தேவையில்லை. புதிய வகை தொற்று கேரளவில் 230 ஆக உயர்ந்துள்ளது. அங்கு 1,100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பரவிவரும் புதிய வகைத் தொற்றால் எவ்விதப் பாதிப்புமில்லை என்று கேரள அதிகாரிகள் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.
புதுவகை தொற்று தொடர்பாக தமிழகத்தில் கடந்த வியாழக்கிழமை 264 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 8 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் பரிசோதனையை அதிகரிக்கும்படி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்,” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.