சென்னை: எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் சென்னை விமான நிலையத்தில் சிக்கின.
இதுதொடர்பாக நைஜீரியாவைச் சேர்ந்த 30 வயது ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்தடைந்த பயணிகள் அனைவரும் வழக்கமான சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது சுற்றுலா விசாவில் வந்திருந்த ஆடவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் இருந்தது.
எனினும், அவரது உடைமைகளைச் சோதனையிட்டபோது எதுவும் சிக்கவில்லை. இந்நிலையில் திடீரென வயிறு வலித்ததாக அந்த ஆடவர் கூறியதை அடுத்து அதிகாரிகள் உஷாராகினர்.
‘எக்ஸ் ரே’ சோதனையின் மூலம் அவரது வயிற்றுக்குள் உருளை வடிவில் ஏதோ ஒன்று இருப்பது தெரியவந்தது. பின்னர் நடந்த விசாரணையின்போது அவர் 71 போதை மாத்திரைகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது.
அம்மாத்திரைகளுக்குள் கோக்கைன் போதைப்பொருளை அவர் மறைத்து வைத்து இருந்தார். அம்மாத்திரைகளின் அனைத்துலக சந்தை மதிப்பு ரூபாய் 12 கோடி என்றும் அவற்றின் எடை 1.2 கிலோவாக இருந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.