சென்னை: குறித்த நேரத்தில் வருமான வரியைத் தாக்கல் செய்யாததுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி உயர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீதான விடுதலையை ரத்து செய்துள்ளது என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
இவர் பொன்முடி வழக்கில் முன்னிலையாகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஆவார்.
இதுகுறித்து வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வியாழக்கிழமை சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “அதிமுக ஆட்சியில் பழிவாங்கும் எண்ணத்தோடு தொடரப்பட்ட வழக்கு இது. இந்த வழக்கில் பொன்முடி குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை கிடைத்தது. அந்தத் தீர்ப்பு இப்போது உயர் நீதிமன்றத்தால் மாற்றி எழுதப்பட்டு தண்டனைக் காலமும் அபராதமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். மேல்முறையீட்டில் பொன்முடி நிச்சயம் விடுதலை செய்யப்படுவார் என்று நம்புகிறோம்.
ஏனென்றால், இந்த வழக்கில் பொன்முடியைப் பொறுத்தவரை வழக்கு தொடுக்கப்பட்டபோதே வெறும் 4,80,000 ரூபாய் தான் கணக்கில் வராத பணமாக காட்டப்பட்டது. ஆனால், அவரின் மனைவி வெற்றிகரமாக பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவரின் ஆண்டு வருவாய் ஏறக்குறைய 5 கோடி ரூபாய் என வருமான வரி மற்றும் வங்கிக் கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பொன்முடியின் மனைவி சரியாக வருமான வரி செலுத்தவில்லை என்ற ஒரே காரணத்துக்காக மட்டும்தான் கீழ் நீதிமன்றம் அளித்த விடுதலையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
1996 - 2001ல் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக பொன்முடி மீது வேறொரு வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த வழக்கில், பொன்முடியின் மனைவிக்கு குடும்பச் சொத்தாக 100 ஏக்கர் சித்தூரில் இருந்ததும், அவரின் சகோதரின் முதலீடுகள் குறித்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிரூபணங்கள் யாவும் தீர்ப்பு வழங்கப்பட்ட போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
எனினும்கூட, பொன்முடியின் மனைவி விசாலாட்சி மிகவும் லாபகரமாக தன்னுடைய தொழில்களை நடத்தி வந்தார் என்பதை இந்த வழக்கில் வங்கி, வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இருந்தும் வருமான வரி தாக்கல் சுணக்கத்தைக் காரணம் காட்டி பொன்முடியின் விடுதலையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மேலும், இந்த தண்டனையை மேல்முறையீட்டின் மூலம் நிறுத்தி வைக்க முயற்சி செய்வோம். அப்படி உச்சநீதிமன்றம் சார்பில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால் தகுதி இழப்பு என்பது இல்லாமல் ஆகிவிடும்.
திராவிட முன்னேற்றக் கழகம் மிக வலுவாக இருக்கிறது. அதைக் கண்டு பாரதிய ஜனதா கட்சி அஞ்சுகிறது என்பது தான் எதார்த்தம்.
2024க்கு பிறகு பாஜகவை சேர்ந்தவர்களின் ஊழல் பட்டியல்கள் கண்டிப்பாக வெளிவரும் எனத் தெரிவித்துள்ளார்.