புதுடெல்லி: இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி துணை நிற்பதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்கள் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நினைவுகூறும் வகையில் நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
அப்போது பேசிய ஜே.பி.நட்டா, வாழ்வுரிமைக்காக இந்திய வம்சாவளியினர் செய்த தியாகங்களைப் பெருமைப்படுத்தும் வகையில், அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்குச் சென்ற இந்திய வம்சாவளி தமிழர்களை நினைவு கூர்வது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்டங்களிலும் வயல்களிலும் தமிழர்களை வேலைசெய்ய பணித்தனர் என்றும் அந்த தமிழர்களின் போராட்டம் மிகவும் வேதனையானது என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இலங்கையிலிருந்து வந்து முகாம்களில் தங்கியிருக்கும்போது பிறந்தவர்கள், மற்றும் தீவிர குற்றப்பின்னணி இல்லாதவர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்து, மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகக் கூறினார்.