சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகச் செயல்படும் கர்நாடக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
கர்நாடகாவின் அத்துமீறல்களை தமிழக அரசும் மத்திய அரசும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கக் கூடாது என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டுவதற்கான முன்னேற்பாடு நிறைவடைந்துள்ளதாகவும் முறையான அனுமதி பெற்று மிக விரைவில் அணை கட்டும் பணி தொடங்கப்படும் என்றும் கர்நாடக அரசு அண்மையில் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் இந்தச் செயல்பாடு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவை மீறும் செயல் என்று ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேகதாது அணை குறித்து, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கவும் அதன் அடிப்படையில் அணைகட்ட அனுமதி அளிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
“ஆனால் இதைச் சற்றும் மதிக்காமல் மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யும் பொறுப்பை மத்திய நீர்வள ஆணையத்திடம் அண்மையில் ஒப்படைத்துள்ளது காவிரி மேலாண்மை ஆணையம்.
“இது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டதாக கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
“இதற்குப் பிறகும், கர்நாடகாவின் அத்து மீறல்களை மத்திய அரசும் தமிழக அரசும் வேடிக்கை பார்க்கக்கூடாது,” என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாது அணையைக்கட்ட கர்நாடகா அரசு துடிப்பதும் அதற்கு மத்திய நீர்வள அமைப்புகள் துணைபோவதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானவை என ராமதாஸ் கூறியுள்ளார்.
மேகதாது விவகாரத்தில் அத்துமீறும் கர்நாடகாவை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ராமதாஸ் மேலும் வலியுறுத்தியுள்ளார்.