ராணிப்பேட்டை: மேகதாது அணை குறித்து கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது குறித்து தமிழக அரசு கவலைப்பட ஒன்றும் இல்லை என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
ராணிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் அனுமதியின்றி கர்நாடக அரசால் மேகதாது அணையைக் கட்ட முடியாது என்று குறிப்பிட்டார்.
“கர்நாடகா அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கலாம், குழுவும் அமைக்கலாம். ஆனால், தமிழ்நாடு அனுமதி அளிக்காமல் அணை கட்ட முடியாது.
“எந்தக் காலத்திலும் மேகதாது அணையை கர்நாடகா கட்ட முடியாது. அதுதான் சட்டம், அதுதான் நியதி,” என்றார் அமைச்சர் துரைமுருகன்.
காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தின்போது கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டுவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.