திண்டுக்கல்: புதிய தொழில் நுட்பம் மூலமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் நிலவுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் அனுப்பப்படுவதாக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியில் இந்தியா முதலடியை எடுத்து வைத்துள்ளது என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரோ மேற்கொள்ளும் ஆராய்ச்சி விண்வெளி துறையில் வளர்ச்சி ஏற்படுத்துவதுடன், சமூகத்திற்கும் பயனளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது மிகப்பெரிய பொருளியல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்ட திரு.சோம்நாத், மூன்றாம் இடத்தை எட்டுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன என்றார்.
இதற்காக அனைத்து துறைகளும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், எதிர்காலம் என்பது தொழில்நுட்பங்களை நம்பி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
“விவசாயத்திலும் கூட புதிய தொழில்நுட்பங்கள் வந்து விட்டன. எனவே மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். அவற்றின் மூலமாகத்தான் வளர்ச்சியை எட்ட முடியும்.
“சிறிய ராக்கெட்டுக்களை ஏவத்தொடங்கி இன்று சந்திரயான் வரை விண்வெளித்துறையில் இந்தியா பெரிய அளவில் சாதித்துள்ளது.
“கடந்த 60 ஆண்டுகளாக தொடர் பயணத்தின் வளர்ச்சி இது. நிலவின் தென் துருவத்தில் நாம் சாதனை படைத்துள்ளோம். விண்வெளி ஆராய்ச்சியின் துணையோடு நாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பணி புரிந்து வருகிறோம். ‘சந்தரயான் 2’ ல் ஏற்பட்ட தோல்வியில் இருந்து பாடம் கற்றோம். அதனால் தான் தவறுகளைச் சரி செய்து அடுத்தமுறை வெற்றி பெற்றோம்,” என்று சோம்நாத் பெருமிதம் தெரிவித்தார்.