சென்னை: எதிர்வரும் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தேர்தல் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டிய ரூ.25,000க்கு பத்து ரூபாய் மதிப்புள்ள நாணயங்களுடன் வந்திருந்தார்.
ஜெயராமன் என்ற அந்த வேட்பாளர் ’கடவுள் எனும் முதலாளி கண்டெத்த தொழிலாளி’ என்ற திரைப்பாடலை ஒலித்தபடி, வேட்புமனுவைத் தாக்கல் செய்ய தமது இருசக்கர வாகனத்தில் வந்திருந்தார்.
மேலும், மேல் சட்டை அணியாமல் வந்திருந்த அவரிடம், சத்தமாக ஒலித்த பாடலை நிறுத்தும்படி காவல்துறையினர் எச்சரித்தனர்.
இதையடுத்து, ரூ.25,000 மதிப்புள்ள பத்து ரூபாய் நாணயங்களுடன் வேட்பு மனுத் தாக்கல் செய்ய சென்றார் ஜெயராமன். எனினும் தேர்தல் நடத்தும் அலுவலர் எழுந்து நின்று தனது வேட்பு மனுவை வாங்க மறுத்ததால் மனுத்தாக்கல் செய்யாமல் திரும்பிச் சென்றார்.
இவர் ஏற்கெனவே எட்டு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டவர்.