புதுடெல்லி: டெல்லி அப்போலோ மருத்துவமனையில் மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வீடு திரும்பியுள்ளார்.
மார்ச் 17ஆம் தேதி அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆபத்தான அறுவை சிகிச்சைக்குப் பிறகு எதிர்பார்த்ததைவிட உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
10 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு, சத்குரு மார்ச் 27ஆம் தேதி மாலை மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.
அதற்கு முன்னர் நான்கு வாரங்களாக அவர் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டார் என்று கூறப்பட்டது. எனினும் அவர் மஹா சிவராத்திரியிலும் டெல்லியில் நடந்த மற்றக் கூட்டங்களிலும் முழுமையாக பங்கேற்றார்.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் காணொளி வெளியிட்ட ஜக்கி வாசுதேவ், தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.
சத்குருவை நேரில் சந்தித்து தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சங்கீதா ரெட்டி நலம் விசாரித்தார்.
சத்குருவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவுக்கு ஈஷா அறக்கட்டளை நன்றி தெரிவித்தது.
தற்போது மருத்துவமனையில் இருந்து அவர் வெளிவரும் காணொளியும் வெளியாகியுள்ளது. அந்தக் காணொளியில், ஜக்கி வாசுதேவ் அங்கு கூடியிருந்தவர்களுக்கு வணக்கம் வைத்தவாறு நன்றி கூறி காரில் ஏறிச் செல்கிறார்.