ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறையில் வாடிவரும் தமிழக மீனவர்களை விடுதலைச் செய்ய வலியுறுத்தி, காரைக்கால் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நூற்றுக்கணக்கான மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
காரைக்காலைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டிய குற்றச்சாட்டின் பேரில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்களின் 4 படகுகளும் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான மீனவர்களுக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காரைக்கால் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவி வருகிறது.
தற்போது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பகுதி மீனவர்கள் அடுத்த கட்டமாக விசைப்படகுகளில் கறுப்புக்கொடி ஏற்ற முயற்சி செய்துள்ளனர்.