மதுரை: மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வு இந்த ஆண்டும் சிறப்பாக நடந்தேறியது.
இதையடுத்து ஒரு லட்சம் பக்தர்களுக்குத் திருமண விருந்து அளிக்கப்பட்டது.
திருக்கல்யாணம் நடைபெற்ற மண்டபம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்காக 30 லட்சம் ரூபாய் செலவில் பத்து டன் பூக்கள் வரவழைக்கப்பட்டன.
இந்த முக்கியமான நிகழ்வில் ஐந்தாயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
சுகாதாரத்துறை சார்பில் 22 துப்புரவு மேற்பார்வையாளர்கள் தலைமையில் 2 ஆயிரம் பணியாளர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.
திருமண விருந்தில் பங்கேற்றவர்கள் மொய் எழுதிவிட்டுச் சென்றனர். விருந்தில் கல்கண்டு சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், வெண் பொங்கல், தயிர் சாதம், உருளைக்கிழங்கு பொரியல், பச்சடி, வடை ஆகியவை இடம் பெற்றிருந்தன.
வண்ண மலர்களுக்குப் பெயர் பெற்ற பெங்களூரில் இருந்து மட்டுமல்லாமல், பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் மலர்கள் வரவழைக்கப்பட்டதாகத் தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.