ஈரோடு: ஊட்டியைத் தொடர்ந்து ஈரோட்டிலும் வாக்குப்பதிவு இயந்திர அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவி திடீரென பழுதானதால் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஈரோடு நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு கேமராவில் அதிகாலையில் பழுது ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக சிசிடிவி கேமரா மாற்றம் செய்யப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாநிலம் முழுவதும் 39 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அத்துடன், ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளும் சுழற்சி முறையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உதகை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் பழுதாகி நின்றுபோனது. அதன்பின்னர் 15 நிமிடங்களில் பழுது சரிசெய்யப்பட்டது.
இந்நிலையில் இதேபோன்ற சம்பவம் ஈரோடு தொகுதியிலும் நடைபெற்றுள்ளது. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், தாராபுரம், காங்கேயம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 4,056 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சித்தோடு அருகே உள்ள அரசுப் போக்குவரத்து பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கண்காணிக்கும் சிசிடிவி கேமராக்களில் ஒரு கேமரா மட்டும் அதிகாலையில் பழுதானதால், உடனடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.