சேலம்: மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துவிட்டனர். இந்தச் சோகச் சம்பவம் சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் ஏப்ரல் 30ஆம் தேதி நிகழ்ந்தது.
அங்குள்ள மலைப்பாதையின் 11வது கொண்டை ஊசி வளைவையொட்டி காணப்படும் மிகப்பெரிய பள்ளத்தில் அந்தப் பேருந்து கவிழ்ந்தது என்றும் அதில் பயணம் மேற்கொண்டவர்களில் 34 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் இந்து தமிழ் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்காலம் என்பதால் கடந்த சில வாரங்களாக ஏராளமான சுற்றுப்பயணிகள் ஏற்காடு வந்து செல்கின்றனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள், குறிப்பாக பேருந்துகள் ஏற்காடு பகுதிக்கு வந்து செல்கின்றன.
அந்த வகையில் ஏப்ரல் 30ஆம் தேதி ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றிருந்தது. 11வது கொண்டை ஊசி வளைவுக்கு அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அப்பேருந்து, இறுதியில் சாலையின் பக்கவாட்டு தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதையடுத்து அப்பகுதியில் வசிப்பவர்கள் விரைந்து வந்து பயணிகளில் சிலரை மீட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
விபத்தில் சிக்கிக் காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆறு பேர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிகிறது.