டெல்லி: டெல்லி மகளிர் ஆணையத்தின் ஊழியர்கள் 223 பேரை அம்மாநில ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடியாக நீக்கி உள்ளார்.
இதனால் ஆளுங்கட்சிக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.
டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்த ஸ்வாதி மாலிவால், விதிகளுக்கு மாறாக, நிறைய ஊழியர்களை நியமனம் செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. அவர் தற்போது ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
“ஒப்பந்த அடிப்படையில், சரியான அணுகுமுறை இல்லாமல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என சுற்றறிக்கை ஒன்றில் ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளன 223 ஊழியர்கள் இத்தனை ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில், ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்யப்படவில்லை என்றும் ஆளுநர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனிடையே, அரசியல் காரணங்களுக்காகத்தான் மகளிர் ஆணைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.