சென்னை: நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததாலும், வெளியிலிருந்து கிடைக்கும் தண்ணீர் அளவு குறைந்த நிலையிலும் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலிருந்து புறப்படும் ரயில்களுக்கு போதுமான தண்ணீரை வழங்க முடியாமல் தெற்கு ரயில்வே திணறுகிறது..
சென்னை - சேலம் இடையே இயக்கப்படும் ரயில்களில் போதிய தண்ணீர் இல்லாமல் கழிப்பறையைப் பயன்படுத்த முடியாமல் இன்னலுக்கு ஆளானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால், வார நாள்களில் (திங்கள் - வியாழன்) பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால், ரயில்களில் முழுமையான அளவில், 50 விழுக்காடு மட்டுமே தண்ணீர் டேங்குகள் நிரப்பப்படுகின்றன. வார இறுதி நாள்களில் மட்டும் 75 விழுக்காடு டேங்குகள் நிரப்பப்படுகின்றன.
இதனால் ரயில் புறப்பட்ட 2 முதல் 3 மணி நேரத்தில் தண்ணீர் தீர்ந்து விடுகிறது. அதன் பிறகு தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.
குறிப்பாக கழிவறைகளில் தண்ணீர் பயன்படுத்த முடியாததால் நாற்றம் அடிக்கிறது. இதனால் தொலைதூரம் பயணிக்கும் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.
கோடை விடுமுறை காலம் என்பதால் வார நாள்களிலும் ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகி கிட்டத்தட்ட 100 விழுக்காடு நிரம்பியிருந்ததால், தண்ணீர் பற்றாக்குறை நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 25 விழுக்காடு தண்ணீர் மட்டுமே நிரப்பப்படுவதாக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
“ஒரு சாதாரண ரயிலின் ஒரு பயணத்துக்கான தண்ணீர் தேவை என்பது 40 ஆயிரம் லிட்டர். சில நாள்களுக்கு முன்பு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் சென்னை - சேலம் இடையே சில நாள்களுக்கு முன்பு இயக்கப்பட்ட ரயிலில் தண்ணீர் தீர்ந்துபோனதால் அடுத்த ரயில்நிலையத்தில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாரிகள் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து கண்காணித்து வருகிறார்கள்,” என்று தெற்கு ரயில்வே தலைமையக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் நிரப்பாமல் ரயில் இயக்கப்பட்டதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
நீண்ட தொலைவு செல்லும் ரயில்களில், தண்ணீர் குறையும் போது அடுத்த ரயில் நிலையங்களில் தண்ணீர் நிரப்பவும், ரயில் பெட்டிகளின் சுகாதாரத்தை சீராக வைக்கவும், தினந்தோறும் சுத்தப்படுத்துதல், குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யவும் ரயில்வே முழுமூச்சில் செயல்பட்டு வருகிறது.