கடந்த 2019ஆம் ஆண்டு துபாயில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் படுகாயம் அடைந்த இந்தியருக்கு ஐந்து மில்லியன் திர்ஹம் (ரூ.11 கோடி) இழப்பீடு வழங்க ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் உச்ச நீதிமன்றம் (யுஏஇ) உத்தரவிட்டுள்ளது
முகம்மது பெய்க் மிர்சா என்ற அந்த இளையருக்கு அப்போது வயது 20. விபத்தால் அவரது வாழ்க்கையே தலைகீழாகிப் போனதாகக் கூறப்பட்டது.
ஓமானிலிருந்து பேருந்து மூலம் துபாய் சென்றபோது அவ்விபத்தில் 12 இந்தியர்கள் உட்பட 17 பேர் மாண்டுபோயினர்.
பேருந்து ஓட்டுநருக்கு ஏழாண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அவர் 3.4 மில்லியன் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
முன்னதாக, படுகாயமடைந்த மிர்சாவிற்கு யுஏஇ ஒரு மில்லியன் திர்ஹம் இழப்பீடு வழங்கியது என்று மிர்சாவின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
ஆனாலும், அது போதாது எனக் கூறி, மிர்சா யுஏஇ உச்ச நீதிமன்றத்தை நாடினார். அந்நீதிமன்றம் மிர்சாவிற்கான இழப்பீட்டுத் தொகையை ஐந்து மில்லியனாக உயர்த்தித் தர உத்தரவிட்டது.
விபத்தில் மிர்சாவின் மூளையில் கடும் காயம் ஏற்பட்டதால் அவரால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வாய்ப்பு மிகவும் குறைவு என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அத்துடன், மண்டையோடு, காது, வாய், கைகால்கள் என மேலும் பல உறுப்புகளிலும் அவருக்குக் காயமேற்பட்டது.
இதனால், தமது பொறியியல் படிப்பை அவரால் முடிக்க இயலாமல் போனதாக யுஏஇ ஊடகச் செய்தி குறிப்பிட்டது.