முதன்முறையாக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்தி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மருத்துவ உலகம் மாபெரும் சாதனை படைத்துள்ளது.
உயிருக்கு அச்சுறுத்தலான இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த, அமெரிக்காவின் மேரிலாண்டைச் சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னட் சீனியருக்குப் பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது. பால்டிமோரில் நடந்த இந்த எட்டு மணி நேர அறுவை சிகிச்சையை மேரிலேண்ட் பல்கலைக்கழக மருத்துவ நிலைய வல்லுநர்கள் மேற்கொண்டனர்.
பன்றி இதயம் பொருத்தப்பட்ட திரு பென்னட் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
"இதயம் செயல்படுகிறது. அதன் இயக்கம் இயல்பாக இருப்பதுபோல் தோன்றுகிறது. நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். ஆனாலும், நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது," என்றார் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் பார்ட்லி கிரிஃபித்.
இந்நிகழ்வு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நூற்றுக்கணக்கானோரிடம் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு 41,354 அமெரிக்கர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் சிறுநீரகங்களை நன்கொடையாகப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. சென்ற ஆண்டில் 3,817 அமெரிக்கர்களுக்கு மாற்று இதயம் பொருத்தப்பட்டது.
இருப்பினும், மாற்று உறுப்பு கிடைப்பதில் கடும் பற்றாக்குறை நிலவுகிறது. உறுப்பிற்காகக் காத்திருப்போர் பட்டியலில் இருப்போரில் நாள்தோறும் கிட்டத்தட்ட 12 பேர் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.