தென்கிழக்காசிய விளையாட்டுகளின் பெண்கள் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றுள்ளார் சிங்கப்பூரின் சாந்தி பெரேரா.
அதன் மூலம் இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் தங்கம் வென்ற சிங்கப்பூரின் முதல் இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் 25 வயது சாந்தி.
வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெற்றுவரும் 31வது தென்கிழக்காசிய விளையாட்டுகளின் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 23.52 விநாடிகளில் முடித்து சாந்தி தங்கத்தைக் கைப்பற்றினார்.
இதற்கு முன் சாந்தி இந்தப் போட்டியை 23.60 விநாடிகளில் முடித்து தேசிய சாதனை படைத்திருந்தார். அதை இப்போது அவரே முறியடித்துள்ளார்.
மேலும், இவ்வளவு குறைவான நேரத்தில் சாந்தி 200 மீட்டர் பந்தயத்தை முடித்தது இதுவே முதல்முறை.
அதோடு, அடுத்தடுத்து நான்கு தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பதக்கம் வென்றுள்ளார் சாந்தி.
23.56 விநாடிகளை எடுத்துக்கொண்ட பிலிப்பீன்சின் கைலா ஏஷ்லி ரிச்சர்ட்சன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
வெண்கலப் பதக்கம், 23.87 விநாடிகளை எடுத்துக்கொண்ட அவரின் சகோதரியான கேலா அனீசெ ரிச்சர்ட்சனுக்குச் சென்றது.