மறைந்த முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் நல்லுடல் தலைநகர் தோக்கியோவில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (ஜூலை 9) அன்று திரு அபேயின் தோக்கியோ இல்லத்துக்கு வெளியிலும் நாரா நகரில் அவர் சுடப்பட்ட இடத்திலும் பொதுமக்கள் பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற மேலவைத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) அன்று பேசிக்கொண்டிருந்த திரு அபே சுடப்பட்டார்.
டெட்சூயா யமாகாமி எனும் ஆடவர் திரு அபே மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால், தாமே செய்த நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு அவரைச் சுட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
திரு அபே சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை மாலை இறந்தார்.
துப்பாக்கி வன்முறை அரிதாக நிகழும் ஜப்பானில், திரு அபேயின் படுகொலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பானிய அரசியல் தலைவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
திரு அபே கலந்துகொண்ட பிரசாரக் கூட்டத்தில் இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
நாரா நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) அன்று நடைபெறும்.
அதனால் சனிக்கிழமை அன்று பிரசாரம் மீண்டும் நடைபெற்றது..
ஃபுஜியோஷிடா நகரில் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கலந்துகொண்ட பிரசாரக் கூட்டத்தில் இரும்பு உணர்த்துக் கருவி வைக்கப்பட்டிருந்தது.