தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை தருவதாகக் கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 300 பேர் இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். மியன்மாருக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் அங்கு சட்டவிரோத இணைய மோசடிக் கும்பலிடம் சிக்கித் துன்புறுவதாக தகவல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து மியன்மாரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுத்தது. அந்த முயற்சியின் பயனாக 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 13 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நேற்று அதிகாலை சென்னை விமானநிலையம் வந்திறங்கினர். தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை வரவேற்றார். எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மீட்கப்பட்ட 13 பேரில் ஒருவர் வெளிநாட்டில் தங்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்கள் பற்றி விளக் கினார். "துபாயில் வேலை செய்ய விண்ணப்பித்திருந்தோம். துபாய் முகவர் தாய்லாந்தில் வேலை இருக்கிறது என்று கூறி அழைத்துச் சென்றார். பின்னர், 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓர் இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றனர். அங்கிருந்த சீனர் குழு ஒன்று எங்களைச் சட்டவிரோதமாக ஓர் ஆற்றைக் கடக்கச் செய்தது.
"எங்கள் கைப்பேசிகளை பறித்துக்கொண்டனர். அதன் பின்னரே நாங்கள் இருப்பது மியான்மார் என்பது தெரியவந்தது. எங்களிடம் விசா இல்லை. சட்டவிரோதமாக அங்கு இருந்தோம். உள்ளூர் ராணுவம் எங்களைக் காப்பாற்றியது. அதற்கு முன்னதாக, தினமும் 15 முதல் 16 மணி நேரம் வரை வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டோம்," என்று கண்ணீருடன் விளக்கினார் அவர்.