மிரட்டல்களைக் கையாள்வது குறித்து அமைச்சுகள்
நாட்டின் மீள்திறனை வலுப்படுத்துவதும் புதிய மிரட்டல்களைச் சமாளிப்பதும் அவசியம் என்று தற்காப்பு அமைச்சு, வெளியுறவு அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகியவை வலியுறுத்தியுள்ளன.
அதிபர் உரை தொடர்பான பிற்சேர்க்கையில் அமைச்சுகள் இவ்வாறு கூறின.
புவிசார் அரசியல், பாதுகாப்பு ஆகிய அம்சங்களில் நிச்சயமற்ற தன்மை நிலவும் வேளையில், சிங்கப்பூர் ஆயுதப்படையை உருமாற்றவும் தேசிய சேவையையும் தற்காப்பு ஒத்துழைப்பையும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கூறினார்.
வலுவான தற்காப்பு நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்து அமைதியை உறுதிசெய்யும் என்றார் அவர். புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துதல், மின்னிலக்கத் திறனை மேம்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு போன்றவை தமது அமைச்சின் முக்கிய முன்னுரிமைகள் என்றார் அவர்.
சிங்கப்பூரின் தற்காப்புக்கு தேசிய சேவை வலுவான அடித்தளம் என்று கூறிய அமைச்சர், வருங்காலத்தில் தேசிய சேவையாளர்கள் மேம்பட்ட அனுபவம் பெற வகைசெய்யப்படும் என்றார்.
வெளியுறவு அமைச்சின் நடவடிக்கைகள் இதற்கு வலு சேர்க்கும்.
மலேசியா, இந்தோனீசியா, புருணை போன்ற அண்டை நாடுகளுடன் பல்வேறு அம்சங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு அது முன்னுரிமை தரும் என்று வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.
சிங்கப்பூர் தற்போது உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக விளங்கினாலும் குறிப்பிடத்தக்க, புதிய மிரட்டல்களைச் சமாளிக்க வேண்டியதன் அவசியத்தை உள்துறை அமைச்சர் கா. சண்முகம் சுட்டினார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர், இணையத் தாக்குதல்கள் போன்றவற்றைக் குறிப்பிட்ட அவர், புதிய மிரட்டல்களை எதிர்கொள்ளும் வகையில் சிங்கப்பூரின் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படும் என்றார்.
பொதுமக்களின் விழிப்புணர்வு, பகுத்தறியும் தன்மை போன்றவையும் நாட்டின் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிப்பதாக அமைச்சர் கூறினார்.