உலகச் சுகாதார நிறுவனம், இந்தியாவில் பரவும் ‘ஆக்டியரஸ்’ எனும் கொவிட்-19 ‘ஓமிக்ரான்’ வகைக் கிருமித் திரிபைக் கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளது. புதிய கிருமித் திரிபால் இந்தியாவில் அண்மையில் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்துள்ளது.
சென்ற ஜனவரி மாத இறுதியில் அடையாளம் காணப்பட்ட அது அதிகம் தொற்றக்கூடியது; பாதிப்பு அதிகமாக இருக்குமென ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
‘ஆக்டியரஸ்’ திரிபு அதற்கு முந்தைய திரிபைக் காட்டிலும் 1.2 மடங்கு தொற்றக்கூடியது என்றும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள திரிபுகளில் ஆக அதிக அளவு தொற்றும் தன்மை கொண்டது என்றும் தோக்கியோ பல்கலைக்கழக ஆய்வு குறிப்பிடுகிறது. இருப்பினும் அது தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கருதப்படுகிறது.
புதிய கிருமித் திரிபால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சல், மூச்சுத் திணறல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றக்கூடும்.
நோயாளிகளில் பலர், கண் எரிச்சல், கண்ணிலிருந்து வடியும் திரவம் காய்ந்து இமைகள் ஒட்டிக்கொள்ளுதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்ற மாதம் இந்த புதிய கிருமித் திரிபால் இந்தியாவில் கொவிட்-19 பாதிப்பு 13 மடங்கு அதிகரித்தது.
ஹரியானா, கேரளா என இரு மாநில அரசுகள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயம் ஆக்கியுள்ளன. பச்சிளங் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பீதியடைய வேண்டாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட நாடுகளில் கொவிட்-19 கிருமியின் ‘ஆக்டியரஸ்’ திரிபு கண்டறியப்பட்டாலும் இந்தியாவில் அது அதிகம் பரவி வருகிறது என உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.