சிங்கப்பூரில் கடந்த மூன்றாண்டுகளில் வங்கி மற்றும் சிங்பாஸ் கணக்குகளை மோசடிக்காரர்களிடம் விற்றதாகப் பிடிபட்ட 19,000 பேரில் ஒருசிலரைத் தவிர பெரும்பாலானவர்களைத் தண்டிக்க இயலவில்லை.
$1 பில்லியனுக்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர உதவியபோதிலும் அவர்களில் பலரும் தண்டிக்கப்படவில்லை.
காரணம், வங்கி, சிங்பாஸ் கணக்குகளை குற்ற நடவடிக்கைகளுக்காக வேண்டுமென்றே விற்றார்களா என்பதை நிரூபிக்க தற்போது நடப்பில் உள்ள சட்டப் பிரிவுகள் போதுமானதாக இல்லை. இருப்பினும் தற்போது உத்தேசிக்கப்பட்டு உள்ள சட்டம் நிறைவேற்றப்படும்போது இந்த நிலைமை மாற்றம் காணும்.
தமக்குத் தெரியாமல் நடந்துவிட்டது என்று அப்போது கூறி தப்பிக்க இயலாதபடி சட்டம் கடுமையானதாக இருக்கும்.
தெரிந்தே பண மோசடிக்குத் துணைபோவோரும் யாருக்காவது தங்களது வங்கி, சிங்பாஸ் கணக்குகளை விற்போரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க இயலாத நிலை ஏற்படும்.
அதற்கேற்ற வகையில் ஊழல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இதர கடுமையான குற்றங்களுக்கான மசோதா திருத்தப்படுகிறது. திருத்தங்கள் நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.
பண மோசடிக்குத் துணை போவோருக்கு எதிராகவும் தங்களது சிங்பாஸ் கணக்கை மோசடிச் செயலுக்குத் தாரை வார்த்துக் கொடுப்போருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்க அந்தத் திருத்த மசோதா வழிவகை செய்கிறது.
இவ்வாறு மோசடிக்குத் துணைபோனது தொடர்பாக 2020க்கும் 2022க்கும் இடைப்பட்ட காலத்தில் 19,000 பேர் காவல்துறையால் விசாரிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சும் அறிவார்ந்த தேசம் மற்றும் மின்னிலக்க அரசாங்க அலுவலகமும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அவர்களில் 250க்கும் குறைவானவர்கள் மீதே வழக்குத் தொடர முடிந்தது.
“திருத்தப்படும் சட்டம் பொதுமக்களிடம் விழிப்புணர்வையும் பணம் செலுத்துவதற்கான கணக்கு மற்றும் சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்துவதில் பொறுப்புமிக்க நடத்தையையும் ஊக்குவிக்கும்,” என்று கூட்டறிக்கை குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் 2021, 2022 ஆகிய ஈராண்டுகளில் மட்டும் பொதுமக்கள் $1.3 பில்லியன் பணத்தை மோசடிகளில் இழந்துள்ளனர். 2021ஆம் ஆண்டு $632 மில்லியன் பறிபோன நிலையில், அதற்கடுத்த ஆண்டு அந்தத் தொகை அதிகரித்து $660.7 மில்லியன் ஆனது. அதேநேரம், 2021ஆம் ஆண்டு உலகளவில் $77.2 பில்லியன் பணம் மோசடி செய்யப்பட்டது.
இந்நிலையில், சிங்பாஸ் கணக்குகளை விற்கும் போக்கு சிங்கப்பூரில் உருவெடுத்து வருவதாக கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், குற்றவாளிகள் புதிய பெயர்களில் நிறுவனங்களைப் பதிவு செய்ய, வங்கிக் கணக்குகளைத் திறக்க, தொலைபேசி சேவைக்குப் பதிவு செய்ய, மோசடிகளையும் இதர குற்றங்களையும் அரங்கேற்ற எளிதாகிவிட்டது என்றும் அது கூறியது