பூன் லே சந்தை, உணவங்காடி இருக்கும் பகுதியில் சில ஆடவர்கள் ஒரு மலைப்பாம்பைத் துன்புறுத்திக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்தக் காட்சி பதிவான காணொளி வெளியானதைத் தொடர்ந்து 'ஏக்கர்ஸ்' எனும் விலங்கு விவகார ஆய்வு, கல்விச் சங்கம் கூடுதல் தகவல் கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சம்பவம் பதிவான காணொளியைப் பொதுமக்களில் ஒருவர் தங்களுக்கு அனுப்பியதாக சங்கம் புதன்கிழமையன்று (19 ஏப்ரல்) ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
காணொளி செவ்வாய்க்கிழமை (18 ஏப்ரல்) இரவு சங்கத்துக்கு அனுப்பப்பட்டது.
சரக்குக் கூடைகளைக் கொண்டு சிலர் மலைப்பாம்பைத் தாக்கும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது.
சுமார் இரண்டு மீட்டர் நீளம்கொண்ட அந்த மலைப்பாம்பு பின்னர் உணவுக்கடைக்கு அருகே கொண்டு செல்லப்பட்டது.
அதற்குப் பிறகு வேறோர் ஆடவர் அதைப் பெரிய கத்தியால் அடித்துக் கொன்றார்.
சம்பவம் நிகழும்போது அங்கிருந்த சிலர் சிரிப்பதும் உற்சாகமூட்டுவதும் காணொளியில் பதிவானது
இது குறித்த அனைத்து தகவல்களையும் விலங்கு விவகார ஆய்வு, கல்விச் சங்கம், தேசிய பூங்காக் கழகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
கழகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.