வளர்ந்து வரும் இந்திய விமானத் துறைச் சந்தையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நாட்டத்தை அதிகரித்துள்ளது.
இந்திய விமானத் துறையின் அளவையும் வாய்ப்புகளுக்கான சாத்தியங்களையும் பொறுத்தவரை வளர்ச்சி வாய்ப்புகள் அதிகம். இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கோ சூன் ஃபோங், 60.
இந்திய விமானத் துறைச் சந்தையில் தற்போது ஏற்பட்டு வரும் இணைப்புகள், ஏர் இந்தியா வளர்வதற்கும் இந்தியாவின் வளர்ச்சி மூலம் நாம் நன்மையடைவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என்றார் அவர்.
ஏர் இந்தியாவை கையகப்படுத்தும் முயற்சியில் ஒழுங்கு முறைக் கண்காணிப்பு அமைப்பின் ஒப்புதலுக்காக டாடா குழுமம் காத்துக்கொண்டிருக்கிறது. நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் தற்போது எஸ்ஐஏவும் ஏர் இந்தியாவும் பங்குதாரர்களாக உள்ள விஸ்தாரா ஏர், புதுப்பிக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்துடன் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் ஒன்றிணைக்கப்படும்.
திட்டமிட்டபடி இணைப்புகள் நடந்தால் ரூ.20,585 மில்லியன் (S$360 மில்லியன்) கூடுதல் முதலீட்டுடன் ஏர் இந்தியாவில் எஸ்ஐஏ 25.1% பங்கைப் பெறும்.
இந்தத் தொகை ரூ.50,200 மில்லியன் ($880 மில்லியன்) வரை எட்டலாம். மீதமுள்ள 74.9% பங்கு டாடாவைச் சேரும். இது S$1.07 பில்லியனுக்குச் சமமான முதலீடு மூலம் சாத்தியமாகும்.
எஸ்ஐஏவின் “பல மைய” உத்தியில் உள்ளடங்கும் இந்த முதலீடு உலக விமானத் துறையில் மூன்றாம் இடத்திலிருக்கும் இந்தியாவில் தடம்பதிக்க வழிவகுக்கும் என்று திரு கோ விளக்கினார்.
“உள்நாட்டு விமானக் கட்டமைப்பு எஸ்ஐஏவிற்கு இல்லாத பட்சத்தில், உலகளவில் தடம் பதிப்பதற்கு பங்காளித்துவங்களும் பல மைய உத்தியும்தான் வழிகள்,” என்றார் திரு கோ.
இந்தியாவை உலகின் மற்ற பகுதிகளுக்கு இணைக்கும் அனைத்துலக விமான சேவை நிறுவனங்களில் ஏர் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்பதை அவர் சுட்டினார்.
இண்டிகோவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாம் பெரிய விமான நிறுவனமான ஏர் இந்தியா அண்மையில் 470 புது விமானங்களை போயிங், ஏர்பஸ் நிறுவனங்களிடமிருந்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 நெருக்கடியின் போது எடுக்கப்பட்ட விரைவான மீட்சி நடவடிக்கைகள் குறித்தும் பேசினார் 2011ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பு வகிக்கும் திரு கோ.
நிறுவனத்தின் வரலாற்றில் ஆக மோசமான சவால் எனக் கருதப்படும் கொவிட்-19 கிருமித்தொற்று பிரச்சினையிலிருந்து மீண்டு வந்துள்ளது எஸ்ஐஏ.
இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்த அதன் நிதி ஆண்டில் $2.16 பில்லியன் நிகர லாபத்தை நிறுவனம் பெற்றுள்ளது. அதன் கீழ்நிலை ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட எட்டு மாத போனஸ் வழங்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்தது.
கிருமித்தொற்று காலத்தில் பணியிலிருந்து நீக்கப்பட்ட சிலர் உட்பட 3,000க்கும் மேற்பட்ட விமானத்துறை ஊழியர்களை கடந்த 12 மாதங்களில் பணி அமர்த்தியுள்ளது எஸ்ஐஏ.
ஆசிய பசிபிக் வட்டாரத்துடன் ஒப்பிடும்போது அப்பகுதியின் விமான நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக யுஎஸ் $10 பில்லியன் இழப்பில் உள்ளன.
“கிருமித்தொற்றுக் காலத்தில் நாம் ஆயுத்த பணிகளில் ஈடுபட்டதால் விரைவில் பயணிகள் எண்ணிகையை உயர்த்த முடிந்தது,” என்றார் திரு கோ.
சாங்கி விமானநிலைய ஐந்தாம் முனையம் 2030ல் திறக்கப்படும்போது, அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கையைச் சமாளிப்பதன் சவால் குறித்தும் திரு கோ சுட்டினார். ஸ்கூட்டை உள்ளடக்கிய எஸ்ஐஏ குழுமம் சாங்கி விமான நிலைய பயணிகள் போக்குவரத்தில் 55% கொண்டுள்ளது.