பெஷாவர்: பாகிஸ்தானில் கடந்த 48 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் குறைந்தது 37 பேர் மாண்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் பெய்த கடும் மழையால் வீடுகள் இடிந்துவிழுந்தன. குறிப்பாக கைபர் பக்துன்குவா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் சாலைகளை வழிமறித்ததாக அவர்கள் கூறினர்.
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள கைபர் பக்துன்குவா மாநிலத்தில் ஏற்பட்ட மழை தொடர்பான சம்பவங்களில் குறைந்தது 27 பேர் மாண்டதாக அந்த மாநிலப் பேரிடர் நிர்வாக ஆணையம் கூறியது. அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள்.
கடந்த 48 மணி நேரத்தில் பத்து வட்டாரங்களில் பெய்த கனமழையால் 37 பேர் காயமடைந்ததாகவும் அது தெரிவித்தது.
இந்தக் கடுமையான நேரத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக விட்டுவிடப்பட மாட்டார்கள் என்றும் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அலி அமின் கண்டாபூர் கூறினார்.
இந்நிலையில், தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தின் குவாடார் நகரில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது ஐவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் படகுகளைக் கொண்டு மக்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
குவாடாரில் கடந்த இரண்டு நாள்களில் பெய்த கனமழையால் நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
பல குடியிருப்புகளும் வர்த்தகக் கட்டடங்களும் இடிந்து விழுந்ததோடு, சாலைகளும் மோசமாகச் சேதமுற்றன.