லண்டன்: பெரும்பாலான அனைத்துலக மாணவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை பிரிட்டனுக்கு அழைத்துச் செல்வதை பிரிட்டிஷ் அரசாங்கம் நிறுத்தத் திட்டமிடுகிறது.
தற்போது பட்டப்படிப்புக்குப் பிந்திய மேற்கல்வியை மேற்கொள்பவர்கள் தங்கள் துணையுடனும் பிள்ளைகளுடனும் அங்கு தங்கியிருக்கலாம்.
இருப்பினும் அடுத்த ஆண்டிலிருந்து அது மாறவிருக்கிறது. பிரிட்டன் அந்நாட்டில் குடிபெயர்ந்தோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
பிரிட்டனில் உள்ள மாணவர்களில் கிட்டத்தட்ட கால்வாசிப்பேர் சீனாவையும் இந்தியாவையும் சேர்ந்தவர்கள். மிக அதிகமாகப் பாதிக்கப்படுபவர்களில் அவர்களும் அடங்குவர் என்று கூறப்படுகிறது.
ஆய்வுப் பட்டப்படிப்புக்குப் பிந்திய மேற்கல்வியைப் பயில்வோருக்குப் புதிய சட்டங்கள் பொருந்தா.
அதிகமான அனைத்துலக மாணவர்கள் பிரிட்டனில் பயிலவேண்டும் என்று விரும்பினாலும், அவர்களுடன் வருவோரின் எண்ணிக்கை சமாளிக்க முடியாத அளவை எட்டியிருப்பதாக பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு கூறியது.
சென்ற ஆண்டு மாணவர்களைச் சார்ந்திருப்போருக்கு ஏறக்குறைய 136,000 விசாக்கள் வழங்கப்பட்டன. 2019ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 16,000 விசாக்களைக் காட்டிலும் அது எட்டு மடங்குக்கும் மேல் அதிகம்.