காஸா: காஸாவில் போர்நிறுத்தம் ஏற்பட, இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க தீவிர பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இந்நிலையில், பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கு முன் இஸ்ரேல் காஸாவில் தனது தாக்குதலை முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஹமாஸ் உறுதியாக இருப்பதால் போர்நிறுத்தம் ஏற்படுவது சந்தேகத்துக்குரியதே என்று கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் போர்நிறுத்தம் ஏற்படுத்த முயற்சி செய்யும் எகிப்திய பேராளர்களைச் சந்திக்க ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே டிசம்பர் 20ஆம் தேதி எகிப்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தெந்த பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்கலாம் என்றும் அதுபோல் இஸ்ரேல் தரப்பு எந்தெந்த பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கலாம் என்பது பற்றியும் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவலறிந்த வட்டாரம் ஒன்று விளக்கியது.
இதுபோல் பிணைக் கைதிகளை பிடித்து வைத்திருக்கும் மற்றொரு போராளிக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் குழுவும் போர்நிறுத்தம் குறித்து விவாதிக்க தனது தலைவர் எகிப்துக்கு பயணம் மேற்கொள்வார் என்று கூறியுள்ளது.
“இவை யாவும் மிகவும் தீவிரமாக நடைபெறும் பேச்சுவார்த்தைகள். இவை ஏதாவது ஒரு தீர்வுக்கு வழிவகுக்கும் என்ற நம்புகிறோம்,” என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜான் கெர்பி சொன்னார்.
ஆனால், இஸ்ரேல் காஸாவில் தனது தாக்குதலை முழுமையாக நிறுத்த வேண்டும். அத்துடன் காஸாவில் மனிதாபிமான உதவி அதிகரிக்கப்பட வேண்டும். அதுவரை பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பேசத் தயாராக இல்லை என ஹமாஸ் தரப்பு உறுதியாக உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
இதேபோல் பிணைக் கைதிகளில் மாதர், தளர்ச்சியடைந்த ஆடவர்கள் ஆகியோர் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் இஸ்ரேல் உறுதியாக இருப்பதாக பேச்சுவார்த்தை குறித்த தகவலறிந்த வட்டாரம் விளக்கியது.