புத்ரஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் சிங்கப்பூரில் கர்ப்பமாக உள்ள அவரின் மகளைக் காண்பதற்காக அவரது கடப்பிதழைத் தற்காலிகமாகப் பெறுவதற்குச் செய்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு மலேசியாவில் ரோஸ்மாவின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டது.
ஊழல் வழக்கை எதிர்நோக்கும் ரோஸ்மா தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வழக்கிற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.
ரோஸ்மா அவரது மகள் நூரியானா நாஜ்வா முஹமது நஜிப்புடன் இருக்கவேண்டிய தேவை உள்ளதாக இதற்கு முன்னர் அவரது வழக்கறிஞர் ஜக்ஜிட் சிங் நீதிமன்றத்தில் கூறினார். ஆகஸ்ட் 28ஆம் தேதி அவரது மகளுக்குக் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஸ்மா வெள்ளிக்கிழமையிலிருந்து ஆகஸ்ட் 23ஆம் தேதி வரையிலும், ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரையிலும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரையிலும் சிங்கப்பூர் வருவதற்கு விண்ணப்பம் செய்ததாகத் திரு ஜக்ஜிட் கூறினார்.
அரசாங்கத் தரப்பு அந்த விண்ணப்பத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதை அரசாங்கத் தரப்புத் துணை வழக்கறிஞர் போ யீ டின் உறுதிப்படுத்தினார்.