அபுதாபி: பரிசுச்சீட்டுக் குலுக்கலில் தமக்கு 25 மில்லியன் திர்ஹம் (ரூ.34 கோடி, S$5.49 மில்லியன்) பரிசு விழுந்ததை நம்ப முடியாமல் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறார் ராஜீவ் அரிக்கட்.
அபுதாபியில் சனிக்கிழமை (பிப்ரவரி 3) இடம்பெற்ற 260வது ‘பிக் டிக்கெட்’ பரிசுச்சீட்டுக் குலுக்கலில்தான் ராஜீவிற்கு இவ்வளவு பெரிய தொகை பரிசாக விழுந்தது.
அல் அய்னில் வசித்து வரும் ராஜீவ், கடந்த மூவாண்டுகளாகப் பரிசுச்சீட்டு வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தம் மனைவியுடனும் எட்டு மற்றும் ஐந்து வயதுடைய இரு குழந்தைகளுடனும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் (யுஏஇ) வசித்து வருகிறார் ராஜீவ்.
கட்டடக்கலை வரைவாளராக இருக்கும் அவர், இம்முறை தம் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் என 20 பேருடன் சேர்ந்து இணையம் வழியாக அந்தப் பரிசுச்சீட்டை வாங்கினார்.
‘பிக் டிக்கெட்’ அலுவலகத்திலிருந்து தமக்குப் பெரும்பரிசு விழுந்த தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறிய ராஜீவ், “இன்னும் என்னால் நம்பவே முடியவில்லை. பெரும்பரிசை நான் வெல்வேன் என நான் நினைத்துப் பார்த்ததே இல்லை. உண்மையிலேயே இது கனவாக இருக்கிறது,” என்றார்.
பரிசுத்தொகையை என்ன செய்வது என இன்னும் யோசிக்கவே இல்லை என்ற அவர், இப்போதைக்குப் ‘பட்டம்போல பறந்துகொண்டிருப்பதாக’வும் சொன்னார்.