தோக்கியோ: ஜப்பானின் கியோட்டோ பகுதியில் உள்ள உயிரோவிய அரங்கு ஒன்றுக்குத் தீ வைத்ததை ஜப்பானிய ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். தமது சிந்தனைகள் திருடப்பட்டதாகக் கூறிய அவர், அதனால் சினமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு நடந்த அச்சம்பவத்தில் 36 பேர் மாண்டதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
கியோட்டோ உயிரோவிய அரங்கில் நடந்த தீச்சம்பவம் உலகம் முழுவதிலும் ஜப்பானிலும் உள்ள உயிரோவியத் துறையையும் அதன் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
“குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டது சரி. நான்தான் அதைச் செய்தேன்”, என்று 45 வயது ஷின்ஜி அவோபா கியோட்டோ மாவட்ட நீதிமன்றத்தில் கூறியதாக ஜிஜி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
“பலர் மாண்டுபோவார்கள் என்பதை நான் யோசிக்கவில்லை. நான் பெரிய அளவிலான குற்றத்தைப் புரிந்துவிட்டேன்”, என்று சக்கர நாற்காலியில் இருந்த அவர் கூறினார்.
இருப்பினும், அவோபாவின் வழக்கறிஞர்கள் மனநலப் பிரச்சனையைச் சுட்டி அவர் குற்றமற்றவர் என்று கூறியதாக அறிக்கைகள் தெரிவித்தன.
தீக்காயங்களால் உயிரிழந்திருக்கக்கூடிய அவோபா, கொலை, கொலை முயற்சி, தீவைத்தல் உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவதாக உள்ளூர் வழக்கறிஞர்கள் கூறினர்.
அரங்கிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அதற்குத் தீவைத்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தீச்சம்பவத்தில் மாண்ட பலர் இளம் ஊழியர்கள். அவர்களில் 21 வயது மாதும் அடங்குவார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மனநலப் பிரச்சனையால் நல்லதையும் கெட்டதையும் வேறுபடுத்தும் ஆற்றல் அவோபாவுக்கு இல்லை என்று அவரது வழக்கறிஞர்கள் கூறினர்.
இவ்வழக்கில் ஜனவரி 25ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.